×

நாளை முதல் 15ம் தேதிவரை அனுமதி: மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகினர்

குளச்சல்: மீன்களின்  இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாள்  தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடை காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும்  ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 15 ம் தேதிவரையும், மேற்கு கடற்கரை மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் ஆகிய கடற்கரை  கிராமத்தில் ஜூன் 1 ம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதிவரை விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்படும். இந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதையடுத்து கடலில் மீன் பிடிப்பதற்கும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த மார்ச் 23 ம் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டுமரங்கள் மட்டும் வாரத்திற்கு 4 நாட்கள் மீன் பிடிக்க செல்ல அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து கடந்த ஒரு மாதமாக கட்டுமரங்கள் மீன் பிடித்து வருகிறது. இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்டத்தில் மீன் பிடி தடை காலம் நாளை (ஜூன் 1ம் தேதி) தொடங்குகிறது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதமாக விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்த வருடம் வழக்கமான மீன் பிடி தடை காலத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விசைப்படகினர் வலியுறுத்தினர். 60 நாள் தடைக்காலத்தை 45 நாட்களாக குறைத்து ஜூன் 1 ம் தேதி முதல் 15 ம் தேதிவரை விசைப்படகுகளுக்கு மீன் பிடிக்க அரசு அனுமதியளித்துள்ளது.

15 நாள் மட்டும் தொழில் செய்ய விசைப்படகினர் ஆர்வம் காட்டவில்லை. என்றாலும் ஒரு சிலர் நாளை முதல் 15ம் தேதிவரை மீன்பிடிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த 2 மாதமாக குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகினை மீனவர்கள் தயார் செய்து வருகின்றனர். விசைப்படகுகளுக்கு தேவையான டீசல், ஐஸ், தண்ணீர் போன்றவைகளை படகில் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். 2 மாதங்களுக்கு பிறகு விசைப்டகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதையொட்டி மீன் தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



Tags : Permission, Fishing, Bathing
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது