×

கருவேலங்காட்டு குகையாக மாறிய வண்டல்-தேவகோட்டை நெடுஞ்சாலை: முட்கள் குத்தி ரத்தக்காயம் ஏற்படுவதாக புகார்

இளையான்குடி: இளையான்குடி அருகே வண்டல்- தேவகோட்டை நெடுஞ்சாலையில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் விபத்து ஏற்படுவதுடன் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி ஒன்றியம் வண்டல் விலக்கு சாலையிலிருந்து, அளவிடங்கான், கீழவிசவனூர், வடக்கு விசவனூர், புக்குளம் வழியாக தேவகோட்டைக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாக இளையான்குடி, பரமக்குடி, ஆனாந்தூர், ஆர்எஸ்.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி மற்றும் ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அரசு- தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பள்ளி வாகனங்களும் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது. வண்டல் விலக்கிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை, இளையான்குடி நெடுஞ்சலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த சாலையின் இருபக்கத்திலும் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, சாலையோரத்தில் இறங்கும் வாகனங்கள் பஞ்சர் ஆகிறது.

மேலும் பஸ்களில் கூட்டம் அதிகமாகும் சமயத்தில், படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கருவேல மரங்களினால் கை, கால்களில் ரத்தக்காயம் ஏற்படுகிறது. வாகனங்கள் வரும்போது டூவீலரில் செல்வோர் ஒதுங்கும்போது முட்கள் குத்தி கை, கால், முகம் என ரத்தக்காயம் ஏற்படுகிறது. எனவே வண்டல், அளவிடங்கான், விசவனூர் பகுதியில் நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வில்லியம் கூறியதாவது, தேவகோட்டை நெடுஞ்சாலை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக, இளையான்குடி நெடுஞசாலைத்துறையால் தொடர்ந்து இந்த சாலை புறக்கணிக்கப்படுகிறது. சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரத்தை அகற்றுவதே இல்லை. அதிகாரிகள் நேரில் வந்து பார்ப்பதும் இல்லை. அதனால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்களுக்கு வழிவிடும்போது முட்கள் குத்தி ரத்தக்காயம் ஏற்படுவதுடன் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. எனவே சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரத்தை வேருடன் அகற்ற, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Vandal-Devakottai Highway ,Devakottai Highway ,cave , Sediment-Devakottai, Highway , turns, cave
× RELATED சிவசக்தி குகத்தலமான திருப்பரங்குன்றம்