நத்தம்: நத்தத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நத்தத்தில் யூனியன் அலுவலகம், மீனாட்சிபுரம், பஸ்நிலைய ரவுண்டானா, மூன்றுலாந்தர், அவுட்டர், மெய்யம்பட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, சுண்டக்காய்பட்டி பிரிவு, கொட்டாம்பட்டி செல்லும் சாலை பகுதிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலைகள் வழியாக மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், சுற்றுவட்டார பகுதிகளுக்கும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதனால் இந்த சாலைகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கால் கார், ஆட்டோ, லாரி, பஸ் போக்குவரத்து இல்லாததால் டூவீலர்களிலே ஏராளமானோர் பயணிக்கின்றனர்.
இந்த சேதமடைந்த சாலைகளால் டூவீலர்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது. குறி்ப்பாக இரவுநேரங்களில் சாலை பள்ளங்கள் தெரியாமல் அடிக்கடி டூவீலர்களிலிருந்து தவறி விழுந்து காயமடைகின்றனர். இதனால் டூவீலர்களில் செல்வோர் இரவில் பயணிக்கவே அச்சமடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.