×

குடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை

சென்னை: தேனாம்பேட்டை பர்மா நகரை சேர்ந்தவர் ஆரம்மாள் (55). இவர், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் அருகே உள்ள மாநகராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் பைக்கில் வெட்டு காயங்களுடன் வந்த வாலிபர் ஒருவர், ஆரம்மாள் பிடித்து வைத்திருந்த தண்ணீரை எடுத்த தனது கையில் உள்ள ரத்தக்கறையை கழுவியுள்ளார். அப்போது ஆரம்மாள், குடிக்கும் தண்ணீரில் இப்படி செய்யலாமா என்று கோபத்துடன் அந்த வாலிபரை கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆரம்மாளை தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி கூச்சலிட்டார்.

 சத்தம் கேட்டு அவரது மகன் அருண் (25) ஓடிவந்து, தனது தாயை வெட்டிய வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த வாலிபர் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், படுகாயமடைந்த தாய் மற்றும் மகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று  விசாரணை நடத்தினர். அப்போது தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி மணி (எ) வேட்டி மணி (30) என்பவர் இவர்களை வெட்டியது தெரியவந்தது.

இவர், சம்பவத்தன்று மடுவங்கரை பகுதியில் வாலிபர் ஒருவரை ெவட்டிவிட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பைக்கை திருடி வந்ததும், கையில் உள்ள வெட்டு காயத்தை தண்ணீரில் கழுவும்போது ஏற்பட்ட மோதலில் தாய் மற்றும் மகனை வெட்டியதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ரவுடி மணியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Drinking water, mother, son, sickle cut, rowdy
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...