கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கர்நாடக மாநில எல்லையான கக்கனல்லா சோதனைச்சாவடியில் நேற்று காலை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து கூடலூருக்கு காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் வந்தது. அதனை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, காய்கறிகள் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு இடையே ஒரு பையில் கட்டு, கட்டாக பணம் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ரூ.51 லட்சம் இருந்தது.
இதுகுறித்து வாகனத்தில் வந்த கொள்ளேகால் பகுதியை சேர்ந்த சச்சின் மகதிக் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் கூடலூர் பகுதியில் வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க கொண்டு வந்ததாக கூறினார். எனினும் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அவை ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் கூடலூர் ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.