சேந்தமங்கலம்: சேலத்தில் இருந்து பெயிண்ட் டப்பாக்களை ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று, நாமக்கல் நோக்கி நேற்று காலை சென்றது. வண்டியை சேலம் அடுத்த கீரனூரை சேர்ந்த டிரைவர் சரவணராஜ் (23) என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது, திடீரென டெம்போவின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, சாலையின் செண்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து காரணமாக சாலையில் பெயிண்ட் வழிந்தோடியது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, கிரேன் மூலம் டெம்போவை அப்புறப்படுத்தி, வாகன போக்குவரத்தை சீர்படுத்தினர். இந்த விபத்தால், சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.