கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரை ஒட்டிய மேல் கூடலூர், கோக்கால், தோட்டமூலா, நடு கூடலூர், சில்வர் கிளவுட், ஏழு முறம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதமாக இரவில் காட்டு யானை சுற்றி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த யானை தோட்டமூலா பகுதியிலுள்ள குடியிருப்புகளை ஒட்டி பகலில் உலா வந்தது. நேற்று முன்தினம் இரவு கோக்கால் பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவர் காரில் வீட்டுக்கு வந்தார். காரை நிறுத்திவிட்டு இறங்கி வீட்டுக்கு செல்ல முயன்றார்.
அப்போது திடீரென யானை வந்ததால் அவர் பள்ளத்தில் குதித்து உயிர் தப்பினார். ஆத்திரமடைந்த யானை காரை தந்தத்தால் குத்தி உருட்டி அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு சென்றது. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு செல்லும் சிலரும் இந்த யானையிடம் சிக்கி உயிர் தப்பி உள்ளனர். குடியிருப்பு பகுதிகளை ஒட்டி நடமாடும் இந்த யானையால் பொதுமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.