×

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 331 கோடியில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹331 கோடி செலவில் கூட்டு குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், புதிய கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பட்லூர் மற்றும் 30 குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோடாங்கிப்பட்டி குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி குடிநீர் அபிவிருத்தி திட்டம், திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டு குடிநீர் திட்டம், ஈரோடு மாவட்டம், மைலம்பாடி ஊராட்சியில் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம்,அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், அரியலூர் மாவட்டம், விருத்தாசலம் சாலையில் நகராட்சி அலுவலக கட்டிடம்.

தஞ்சாவூர் மாவட்டம், காந்திஜி சாலையில் மாநகராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சிவகங்கை மாவட்டம், கணேசபுரத்தில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 126 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மல்லிகாபுரம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் நகர்ப்புற சமூகநல மருத்துவமனைகள்,

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூராட்சியில் வாரச்சந்தை கட்டிடம், மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் சந்தை கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் சந்தை கட்டிடம், திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் வாரச்சந்தை கட்டிடம், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சந்தை கட்டிடம் என மொத்தம் 330 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Edappadi ,districts ,Chennai , Chennai, Districts, Drinking Water Supply Project, Sewerage Project, Chief Minister Edappadi
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்