×

‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் மக்களிடம் பெற்று திமுக கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது என நிரூபிக்க தயார்

* அமைச்சர் காமராஜூக்கு திமுக சவால்

சென்னை: ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களிடம் பெற்று கொடுத்த கோரிக்கை மனுக்கள் எல்லாமே உண்மையானது என்று நிரூபிக்கிறோம் என்று அமைச்சர் காமராஜூக்கு திமுக சவால் விடுத்துள்ளது. திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச் 24ம் தேதி கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை அறிவித்தது அதிமுக அரசு. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாக பல லட்சம் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு அதிமுக அரசு தேவையான உதவிகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க தவறிய நிலையில் கருணை உள்ளத்தோடு,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் எண்ணத்தில் எங்கள் கட்சி தலைவர் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிவித்தார்.

அதன் மூலம் பல லட்சம் மக்களுக்கு உணவுப் பொருட்களும், காய்கறிகளும், மருந்துப் பொருட்களும் நிதி உதவிகளும் திமுகவினர் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் கட்சி பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டது. உணவுகளை தயாரித்து பொட்டலங்களாகவும் வழங்கினோம். இந்த ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்துக்காக பொது தொலைபேசி சேவை ஒன்றையும் அறிவித்திருந்தோம். அந்த தொலைபேசி வாயிலாக ஏறத்தாழ 15 லட்சம் பேர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தார்கள். உணவு, மருந்துப் பொருட்களை வழங்குவதற்காகவே இச்சேவை தொடங்கப்பட்டது.

ஆனால், இவை இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் பதிவு செய்துள்ளார்கள். இதில் ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் வழங்கினோம். மீதமுள்ள மனுக்களை மாவட்ட ரீதியாக பிரித்து திமுக மாவட்ட செயலாளர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர்களில் பலரும் இக்கோரிக்கை மனுக்களை படித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க தொடங்கி இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் கடந்த 28ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தி.மு.க. கொடுத்த மனுக்கள் போலியானவை, பொய்யானவை என்று கூறியிருக்கிறார்.

 மக்களிடம் இருந்து வந்த மனுக்களைத்தான் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோமே தவிர, இவற்றை போலியாக தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை.
இதுதொடர்பாக, அவ்விவாத நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கலந்துகொண்ட ஒருவர், ‘தி.மு.க. கொடுத்த மனுக்கள் பொய்யானவை. அதனை நிரூபிக்க உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தயாராக இருக்கிறார்’ என்று கூறினார். அதற்கு நான் ‘இந்த மனுக்கள் அனைத்தும் உண்மை. எங்கள் தலைவரிடம் அனுமதி பெற்று அமைச்சரை சந்திக்க தயார்’ என்று அப்போதே சொன்னேன். இதற்கான அனுமதியை கட்சித் தலைவரிடம் நான் பெற்றுள்ளேன்.

அமைச்சர் காமராஜரே,  நீங்களே நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள். நேரில் வந்து தி.மு.க. கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது என்றும் எங்கள் கட்சி தலைவர் முன்னெடுப்பது பொதுமக்களுக்கான நேர்மையான அரசியல்தான் என்பதை நிரூபித்து, தாங்களும் தங்கள் அரசும் நடத்துவதுதான் கபடநாடகம் என்றும் நேர்மையற்ற அரசியல் என்றும் நிரூபிக்கத் தயார் என்பதை பொது அறைகூவலாக விடுக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : DMK , Joint Comedy Project, DMK, Minister Kamaraju
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...