கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஒரே நாளில் 344 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,536 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை முதல்வர் மம்தா பானர்ஜி தளர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், ‘ஜூன் ஒன்றாம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் முழு ஊழியர்களுடன் இயங்கலாம்.” என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து மம்தா விமர்சித்து வந்தார். இந்த சிறப்பு ரயில்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் புலம் பெயர் தொழிலாளர்கள் அழைத்த செல்லப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், வழிபாட்டு தலங்களை திறக்கவும், அரசு, தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படுவதற்கும் அவர் அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.