×

சோகத்துக்கு மேல் சோகம்: ஷ்ராமிக் ரயில் கழிவறையில் உபி. தொழிலாளியின் சடலம்: பையில் 28,000 பணம், புத்தகங்கள்

ஜான்சி:  உத்தரப் பிரதேசத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயிலின் கழிவறையில் புலம்பெயர் தொழிலாளியின் சடலம் கிடந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுளளது.
ஊரடங்கால் பல்ேவறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சிறப்பு ரயில், பஸ்கள், லாரி போன்றவற்றில் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். சாலை மார்க்கமாக ஆயிரக்கணக்கில் நடந்தும் செல்கின்றனர். இதில் இருந்து உயிர் தப்பி அவர்கள் குடும்பத்துடன் சேர்வது என்பது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருக்கிறது. காரணம், வழியில் பல்வேறு விபத்துகள், பட்டினி போன்றவற்றால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இந்நிலையில், சிறப்பு ரயிலில் சென்ற தொழிலாளி ஒருவர் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி நகர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த  ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் நேற்று முன்தினம் ரயில்வே ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். அப்போது, கழிவறையில் 38 வயதுடைய ஆண் சடலம் கிடப்பது கண்டு அதிர்ந்்தனர்.  விசாரணையில், இறந்து கிடந்தவர் மோகன்லால் சர்மா என தெரிந்தது.  இவர் மும்பையில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக இவரும், இதே பகுதியை சேர்ந்த மற்ற சில தொழிலாளர்களும் வேலையிழந்து, ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் கடந்த 23ம் தேதி ஜான்சி நகர் ரயில் நிலையம் வந்துள்ளனர்.  அங்கிருந்து, கோரக்பூர் செல்வதற்காக சர்மா அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த ரயில் கோரக்பூருடன் நின்று விட்டதா? அல்லது பீகார் வரை இயக்கப்பட்டதா? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

ரயில் ஜான்சி நகர் ரயில் நிலையத்துக்கு மீண்டும் வந்தபோது தான், சர்மாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரிடம் ரூ.28 ஆயிரம், சில புத்தகங்கள் இருந்தன.  பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் வழங்கப்படும் என்றும், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், பீகார் ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த தனது தாயை குழந்தை ஒன்று எழுப்ப முயற்சிக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழ செய்த நிலையில், ரயில் கழிவறையில் தொழிலாளர் இறந்து கிடந்த சம்பவம் நடந்துள்ளது.

* டெல்லியில் வேலை செய்து வந்த உபி. மாநிலத்தை சேர்ந்த 45 வயது நபர், வாடகை வண்டி மூலம் தனது மகனுடன் நேற்று தனது சொந்த ஊரான சித்தரகூட் வந்து சேர்ந்த போது திடீரென இறந்தார்.
* தெலங்கானாவில் கொத்தனார் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 60 வயது முதியவர் சொந்த ஊருக்கு நடந்து வந்தபோது, ஒடிசா மாநிலம், சோரோ அருகே நேற்று திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.

Tags : train train toilet Worker ,Ubis ,train toilet worker , Sharamic Rail Toilet, Uttar Pradesh, Worker, Body, Books
× RELATED எம்டிஆர் கட்டணம் ரத்து செய்ததால்...