துபாய்: அரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்துச் செல்ல தனியார் நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் தனி விமானங்களை இயக்க, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அனுமதி அளித்துள்ளது. தனி விமானங்களை ஏற்பாடு செய்யும் தனியார் ஏஜென்சிகள், சமூக அமைப்புகள், பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் விளக்கப்பட்டுள்ளது.
தனி (Charted ) விமானங்களுக்கான செலவு மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்காகன செலவு ஆகியவற்றை. தனி விமானத்தை வாடகைக்கு எடுக்கும் அமைப்பு அல்லது நிறுவனம் ஏற்க வேண்டும்.
இந்த அமைப்புகள், நிறுவனங்கள், இந்தியாவுக்கு திரும்ப விரும்பும் அனைத்து பயணிகளும் தூதரக வலைத்தளமான www.cgidubai.gov.in -ல் பதிவு செய்து இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விமானங்களின் பயண அட்டவணையை cgioffice.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சலில் துணைத் தூதரகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கு அனுமதி அளிக்கும் வரையில், பயணிகள் டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம், வெளிநாடுகளில் தவிக்கும் பல ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப வழி பிறந்துள்ளது.