திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலி கிராமம் சொக்கம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (42). கன்டெய்னர் லாரி டிரைவர். அரிகிருஷ்ணனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் கண்ணன் (35). அவரது சகோதரர் கன்னியப்பன் ஆகியோருக்கு இடையே வீட்டுமனை சம்பந்தமாக தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சகோதரர்கள் 2 பேரும், அரிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மனமுடைந்த அவர், வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி திருக்கழுக்குன்றம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், அரிகிருஷ்ணன் தற்கொலை செய்யும் முன், சில வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். அதில், ‘கண்ணனும், கன்னியப்பனும் எங்களது இடத்தை அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு அனைவரும் துணையாக உள்ளனர். அவர்களை எதிர்க்க, என்னால் முடியவில்லை. என் சாவுக்கு பிறகாவது போலீசாரும், நீதித்துறையும் உரிய நீதி வழங்க வேண்டும். என் சாவுக்கு காரணம் கண்ணனும், கன்னியப்பனும்தான் என நீள்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.