திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு 108 கலசாபிஷேக பூஜை நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு 108 கலசாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி, நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு 108 கலசாபிஷேக பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக, அக்னி நட்சத்திர நிறைவையொட்டி யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.