டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறை பதவியேற்ற ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2-வது முறையாகப் பதவியேற்று வரலாற்று பெருமையை ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெற்றார்.
பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்று வரும் 30-ம் தேதியுடன் ஒராண்டு ஆட்சியை நிறைவு செய்கிறார். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வருடங்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. குறிப்பாக, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அயோத்தி வழக்கை சுமூகமாக முடித்தது, கொரோனா பரவலை கையாள்வது, இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.
இந்நிலையில் வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் பதவியேற்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு, இந்த ஓராண்டில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. மக்கள் மத்தியில் மத்திய அரசு பற்றித் திருப்தியும் அதிருப்தியும் கலந்துகிடக்கிறது. சிறந்த பாராட்டுகள் ஒரு தரப்பில், கடும் விமர்சனம் இன்னொரு தரப்பில் என ஆட்சி நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.