×

சம்பளம் முழுவதையும் குடித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே சென்றான்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்டப்பன் (65). இவர், அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மாத சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாத சம்பளமாக ₹ 3 ஆயிரத்தையும் வாங்கி, மொத்த பணத்திற்கும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரது மகன்கள் சிரஞ்சீவி, ரஜினி இருவரும் கேள்வி கேட்டுள்ளனர். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிரஞ்சீவி தந்தையை அடித்து கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்த கிருஷ்டப்பனுக்கு  மார்பு, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

ஆனால் தந்தை கீழே விழுந்து விட்டதாக திருவள்ளூர் மருத்துவமனை மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, அவர் வரும் வழிலேயே இறந்து விட்டதாக கூறினர். பின்னர், சடலத்தை வீட்டிற்கு எடுத்து வந்தனர். கிருஷ்டப்பன் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது மகள் புஜ்ஜியம்மாள், பென்னாலூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில், திருவள்ளூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நேற்று நடந்தது. அதில், சிரஞ்சீவி அடித்து தள்ளியதில் இறந்தது தெரியவந்தது. அதன்பேரில், பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், வழக்கு பதிவு செய்து தந்தையை அடித்து கொலை செய்த, சிரஞ்சீவியை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Salary, father murder, son arrested
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...