அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு கருக்கு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (30). சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் ராஜேஸ்வரி என்ற பெண்ணை 2006ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மணிகண்டன் (14) என்ற மகன் இருக்கிறான். இதற்கிடையில், ராஜேஸ்வரி 2009ம் ஆண்டு ஸ்டவ் வெடித்த விபத்தில் உயிரிழந்தார். இதன்பிறகு, 2016ம் ஆண்டு கோபாலகிருஷ்ணன், கோகிலா (26) என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எஸ்வந்த் (3) ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் கடந்த 24ம் தேதி வீட்டின் படுக்கையறையில் இருந்த மின் விசிறியில் தூக்குப் போட்டு கோகிலா தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணையில், கோகிலாவிடம் வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஒ விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.