×

சாலையோர வியாபாரியை தாக்கிய எஸ்ஐக்கு சரமாரி அடி காவல் நிலையம் சூறை: பாரிமுனை அருகே பரபரப்பு

தண்டையார்பேட்டை: பாரிமுனை பூக்கடை காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் கோபி (39) என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பூக்கடை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோட்டீஸ்வரன் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றபோது சாலையோர கடையை மூடும்படி கோபியிடம் கூறினார்.  அதன்படி கடையை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே, ஆத்திரம் அடைந்த  உதவி ஆய்வாளர், “வேகமாக மூடு” என்று கூறி கோபியை தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது கடைக்கு வந்த கோபியின் சகோதரி காவேரி (25) உதவி ஆய்வாளரை தகாத வார்தையால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உதவி ஆய்வாளர், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து தாக்கியதாக தெரிகிறது. இதில் காவேரிக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்த காவேரியின் கணவர் சபாபதி மற்றும் உறவினர்கள் பூக்கடை காவல் நிலையத்தில் புகுந்து அங்கு இருந்த உதவி ஆய்வாளர் கோடீஸ்வரனை சரமாரியாக அடித்து காவல் நிலையத்தை சூறையாடினர். இதனால் காவல்நிலையம் போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து, காவேரியை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் கூறித்த வீடியோ வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருவதால் பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் உடனடியாக உதவி ஆய்வாளர் கோட்டீஸ்வரனை கண்ட்ரோல் ரூமுக்கு மாற்றி உத்தரவிட்டார்.


Tags : Storm ,Police Station ,BARIMUNE Si ,Parimunai , Roadside Dealer, SI, Police Station, Barimunai
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்