×

இலங்கை மக்களுக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு: இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்...!

சென்னை: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். இலங்கை பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து  வந்தார் ஆறுமுகன் தொண்டமான். வீட்டில் தவறி விழுந்த போது 55 வயதான ஆறுமுகன் தொண்டமானின் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஆறுமுகன் தொண்டமான் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  திரு.ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் உடல்நலக் குறைவால் 26.05.2020 அன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரு.ஆறுமுகன்  தொண்டமான் அவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக  இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

திரு.ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,  அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்  வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்:

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு: இலங்கை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி எனக்கு தாங்க முடியாத துயரத்தினையும், பேரதிர்ச்சியையும் அளித்தது. அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான செளமியமூர்த்தி தொண்டைமானின் பேரனான இவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர் - காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் என்னை நேரில் சந்தித்து, உடல்நலம் விசாரித்தவர். இலங்கை அதிபராக இருந்த திரு. மைத்ரிபால சிறிசேனா அவர்கள் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்து எழுதிய கடிதத்தை என்னிடம் அளித்து - உலகத் தமிழர்களின் நலன் காக்க கலைஞர் விரைவில் குணம் பெற வேண்டும் என விரும்பியவர்.

தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமானை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Disaster ,Mukhtar ,country ,Sri Lankan ,Palanisamy , Disaster for Sri Lankan people and country: Palanisamy, Mukhtar's condolences
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...