நெல்லை: வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை பரிசோதிக்க கங்கை கொண்டான் செக்போஸ்டில் வயதானவர்களுக்கும் பணிகள் வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு பணியாற்றும் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா பரவல் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை சோதனை செய்ய கங்கைகொண்டானில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து உரிய ஆவணங்கள் உள்ளதா, அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று வருகிறார்களா என்பதை வருவாய் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்து நெல்லை மாவட்டத்திற்குள் அனுப்புகின்றனர். இதற்காக கங்கைகொண்டான் ஐடி பார்க் அருகே 3 ஷிப்டுகளில் அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஒவ்வொரு ஷிப்டிலும் 2 தாசில்தார்கள், 2 வருவாய் ஆய்வாளர்கள், ஒரு விஏஓ, 20 போலீசார் பணியில் இருப்பர். இவர்கள் வாகனத்தில் இறங்கும் நபர்களின் ஆவணங்களை பரிசோதித்து, அங்குள்ள நோட்டில் தகவல்களை பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பர். டாக்டர்கள் குழு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கும்.
வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அங்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக அப்பகுதியில் கிருமிநாசினி உள்ளிட்டவை தினமும் அடிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும் அங்கு வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் ஆகியோருக்கும் பணிகள் வழங்கப்படுகிறது. 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணிவிலக்கு அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியும், பலர் அங்கு பணிக்கு வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பு பணியில் களப்பணியாற்றும் அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் வழங்கப்படுவதில்லை. எனவே கொரோனா தடுப்பு பணியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக வரும் இடங்களில் வயதானவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் விருப்பமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் ஆகியோருக்கும் பணிகள் வழங்கப்படுகிறது. 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணிவிலக்கு அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியும், பலர் அங்கு பணிக்கு வருகின்றனர்.