×

வாழ்க்கையை மெருகேற்ற முடியாமல் தவிக்கும் கவரிங் நகை செய்யும் தொழிலாளர்கள்: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

சிதம்பரம்: பொன்நகை என்றாலே பெண்கள் புன்னகை பூப்பார்கள். ஆனால் நாளுக்கு நாள் ஏறி வரும் தங்கத்தின் விலையால் பெண்களின் தங்க நகை கனவு, கனவாகவே முடிந்து விடுகிறது. தங்க நகைகளுக்கு ஈடாக இன்னும் சொல்லப்போனால் தங்க நகைகளை விட அதிக டிசைன்களில் கவரிங் நகைகள் விதவிதமான மாடல்களில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. கனவுகளில் மட்டுமே தங்க நகைகளை அணிந்து அழகு பார்க்கும் பெண்களுக்கு கிடைத்த அரிய வரப்பிரசாதம்தான் கவரிங் நகைகள். அதனால்தான் பெரும்பாலான பெண்களின் பார்வை கவரிங் நகைகள் மீது விழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகரம், கவரிங் நகைகளுக்கு பிரசித்தி பெற்றது. கவரிங் நகை செய்யும் தொழிலாளர்கள் இந்த ஊரில் அதிகம். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு கவரிங் கடைகள் திறக்கப்பட்டு விட்டது. தமிழக அளவில் சிதம்பரம் கவரிங் என்று சொன்னாலே அதற்கென தனி பெருமை உண்டு. முன்பு சுமார் 10 ஆயிரம் பேர் கவரிங் நகை தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் நாளடைவில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் கவரிங் நகை செய்யும் பணிகள் மிஷின் மூலம் நடந்து வருவதால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரமாக குறைந்தது.

ஒரு நாள் முழுவதும் உழைத்தாலும் ரூ. 200 முதல் ரூ.250 வரை மட்டுமே கவரிங் நகை தொழிலாளிகளுக்கு கூலியாக கிடைக்கும். கடந்த 2 மாதமாத ஏற்பட்டுள்ள கொரோனா ஊரடங்கின் கோரப்பிடிக்கு கவரிங் நகை தொழிலாளிகளும் தப்பவில்லை. இதனால் இந்த தொழிலாளிகளுக்கு கிடைக்கும் சொற்ப தொகைக்கும் வழியில்லாமல் போய்விட்டது. கவரிங் கடைகள் மூடப்பட்டதால் இந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கினர்.
இவர்களில் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இரண்டு முறை தலா ரூ. 1,000 நிவாரணமாக வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலான நகை தொழிலாளர்கள் மட்டுமே நல வாரியங்களில் உறுப்பினராக இருக்கின்றனர். கைவினை தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களில் பலரும் தங்களது பதிவுகளை புதுப்பிக்காமல் பலருக்கு அரசு அறிவித்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நகைத் தொழிலாளர்களின் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தங்களால் இயன்ற அளவுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை ஏற்பாடு செய்து இவர்களது குடும்பத்திற்கு வழங்கி உள்ளனர். ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர் இந்த தொழிலில் ஈடுபட்டாலும் அவர்களால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1000 ரூபாயை கூட சம்பாதிக்க முடியாது.

கடந்த சில தினங்களாக கவரிங் நகைக் கடைகள் திறக்கப்பட்டும், கடைகளில் போதிய அளவு வியாபாரம் இல்லை. கவரிங் நகையை மொத்த விலைக்கு வாங்க வரும் சிறு, சிறு வியாபாரிகள் தங்களது கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்கின்றனர். தற்போது பொதுப் போக்குவரத்து இல்லாததால் கவரிங் நகை வாங்க வருவதற்கு கூட ஆளில்லை. கடைகள் திறக்கப்பட்டும் போதிய வியாபாரம் இன்றி வெறிச்சோடியதால், கவரிங் நகை செய்யும் தொழிலாளிகளுக்கும் வேலை இல்லை. கடைகளில் இருக்கும் நகைகள் விற்பனையானால்தான் தொழிலாளர்கள் நகைகளுக்கு தேவை இருக்கும். பொதுப் போக்குவரத்துக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாததால், கவரிங் நகை விற்பனை மந்த நிலையிலேயே உள்ளது. இதனால் கவரிங் நகைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

விதவிதமான டிசைன்களில் கவரிங் நகைகளை செய்து தாய்மார்களை மகிழ்ச்சிப்படுத்தும் நகைத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் தற்போது மகிழ்ச்சி இல்லை. அதனால் தமிழக அரசு நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் பதிவு செய்யாத தொழிலாளர்கள் என்கின்ற பேதத்தை பார்க்காமல் கவரிங் நகை தொழிலாளி ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு  தலா ரூ.10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதே வேலை இழந்து தவிக்கும் கவரிங் நகை செய்யும் தொழிலாளர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.



Tags : jewelry workers , Covering jewelry workers,failing, living,demand , government relief
× RELATED செங்கல்பட்டு சுங்கசாவடியில்...