சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், இங்கிலாந்தில் உள்ள மூத்த சகோதரியிடமும் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தினமும் 10 நிமிடங்கள் பேச அனுமதி தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘வாட்ஸ் ஆப் காலில் பேசுவதற்கு அனுமதி வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்னை ஏற்படும்?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ‘அரசு தரப்பில் நாளை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அன்றே தீர்ப்பு வழங்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.