நாகர்கோவில்: சமூக வலைதளங்கள் மூலம் பழகி, இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி, குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து அவர் பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல நகரங்களை சேர்ந்த பெண்கள் காசியிடம் ஏமாந்துள்ளனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற குமரி மாவட்ட காவல்துறை தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆவணங்கள், சிபிசிஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.