சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஏ.கே. எஸ். ஏ.எஸ்.பிலால் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மீண்டும் பரவாமல் தடுக்க சீனாவில் பல்வேறு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. செல்போன் பயனில் ஆப் எனப்படும் செயலியை உடல்வெப்பத்தை கணக்கிடுவதற்காக சென்சாரை இணைத்து ‘ஹெல்த் கோட்’ என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த செயலி மூலம் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியும். மேலும், தெர்மல் ஸ்கேனர் எனப்படும் கண்காணிப்பு கேமராக்களையும் பொது இடங்களில் பொருத்தியுள்ளனர்.
இதேபோன்று தமிழகத்திலும் தொழில்நுட்ப வசதிகளை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், புதிய கண்டுபிடிப்பு குறித்த உத்தரவிட முடியாது. இந்த வழக்கில் மத்திய அரசையும் சேர்த்து மனு தாக்கல் செய்வதுடன் விரிவான ஆய்வு செய்து கூடுதல் மனு செய்யுங்கள் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.