உடுமலை: சமூக இடைவெளியின்றி தூய்மை பணியாளர்கள் குப்பை லாரியில் கும்பலாக அழைத்து வரப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடுமலை நகராட்சியின் 33 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள உரக்கிடங்கில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல் நாடுமுழுவதும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், அரசு வாகனங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது, நகர் முழுவதும் குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அகற்றுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் உடுமலை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பணிக்கு அழைத்து வர சுகாதாரமற்ற குப்பை வண்டியையே பயன்படுத்துகின்றனர்.
மேலும் சமூக இடைவெளியின்றி அவர்களை வாகனங்களில் அடைத்து பணிக்கு அழைத்து வருவது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களின் உடல்நலனின் அக்கறை கொள்வதோடு, கொரோனா ெதாற்று பரவாமல் தடுக்க தூய்மை பணியாளர்களுக்கென தனி வாகனம், அரசு பேருந்து ஏற்பாடு செய்து கொடுப்பதோடு, ஒரு இருக்கைக்கு ஒருவர் என்ற சமூக இடைவெளியுடன் பணிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.