சென்னை: துபாயில் ஈமான் என்ற தமிழ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மாதம் முழுவதும் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்பு கஞ்சியுடன் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு துபாய் அரசின் சமூக நல ஆணையம் அனுமதியுடன், பிரத்தியேக தமிழக சமையல் கலைஞர்கள் மூலம் இந்த நோன்பு கஞ்சி தயாரித்து, அரசு வழிகாட்டுதலுடன் தன்னார்வளர்கள் மூலம் துபாய் நகரின் தேரா பகுதியில் உள்ள நைப், தமிழ் பஜார், ஹோர் அல் அன்ஸ், அல் கிசஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நோன்பு திறப்பவர்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்பட்டது.
அமீரக வர்த்தகர் லுத்தா ஆதரவின் பேரிலும், ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான் வழிகாட்டுதலின் பேரிலும் ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து, இந்த பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஈமான் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான் கூறுகையில், ‘‘ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்காக தினசரி நோன்பு கஞ்சியுடன், பழங்கள், தண்ணீர் உள்ளிட்டவை அடங்கிய 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. ஈமான் அமைப்பின் இந்த சேவைக்கு துபாய் சமூக நல ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது,’’ என்றார்.