×

வானகரத்தில் சினிமா பாணியில் சம்பவம்: விபத்து ஏற்படுத்திய கார் மீது பயணித்து தப்பிய வாலிபர்

சென்னை: சென்னை வானகரத்தில் காரும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில், காயமடைந்த நபர் காரின் மேல் இருப்பதுகூட தெரியாமல்  காரை ஓட்டி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.  அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (28),  தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வானகரம் சாலை வழியாக வந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.  அப்போது அந்த வழியாக வந்த கார், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ரஞ்சித் தூக்கி வீசப்பட்டு காரின் மேல் விழுந்துள்ளார். காரை ஓட்டி வந்தவர் பதற்றத்தில் இதை கவனிக்காமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் அந்த காரை ஒரு கிலோ மீட்டர் துரம் விரட்டி சென்று, ரஞ்சித்தை மீட்டனர். அப்போது தான் காரின் மீது காயமடைந்த நபர் இருப்பது காரை ஓட்டி வந்தவருக்கு தெரியவந்துள்ளது. விபத்தில் ரஞ்சித்துக்கு கால்  முறிவு மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அவரை  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேசமூர்த்தி  (25) என்பதும், திருமழிசை காய்கறி சந்தையில் தக்காளி வியாபாரம் செய்பவர்  என்பதும்,  அவர் இரவு சந்தைக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

கணேசமூர்த்தியை கைது செய்த போலீசார், அவர் மீது விபத்து ஏற்படுத்தியது, தப்ப முயற்சி செய்தது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். விபத்து ஏற்பட்ட போது சினிமா பாணியில் விபத்து ஏற்படுத்திய கார் மீதே காயம் அடைந்தவர் பயணித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இருவர் பலி: கொரட்டூர் சாமி அவென்யூ பாரதி நகரை சேர்ந்தவர் ராமானுஜம் (30). இவரது நண்பர் மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் நகரை சேர்ந்த வாசு (54). இவர்கள் இருவரும் நேற்று அம்பத்தூரில் இருந்து மண்ணிவாக்கம் புறப்பட்டனர். முடிச்சூர் பெரிய ஏரி அருகே சென்றபோது, இவர்களது பைக் திடீரென பஞ்சரானதால், நிலைதடுமாறி விழுந்தனர். இதில், இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Tags : incident ,sky ,accident ,The Young Men Who ,Vanakarat , Aerospace, cinema style, accident, car, youngster
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...