சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் உட்பட 12 போலீசாருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் 2 ேபர், தலைமை காவலர்கள் 2 என 12 போலீசாருக்கு நேற்று நோய் தொற்று உறுதியாகி உள்ளது.
இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். மேலும் அவர்களுடன் பணியாற்றிய காவலர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தியுள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை மொத்தம் 274 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ராகவேந்திரா சாலையை சேர்ந்த 9 வயது சிறுவன், மேற்கு தாம்பரத்தில் 2 பேர், கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், மாடம்பாக்கத்தில் ஒருவர், பீர்க்கன்காரணை மற்றும் புது பெருங்களத்தூரில் 4 பேர், வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தோஷபுரத்தில் 2 பேர் என 12 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று ஏற்பட்டது.
116 பேர் பாதிப்பு:
ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட யானைக்கவுனி, சவுகார்பேட்டை பகுதிகளில் 5 பேர், கொத்தவால்சாவடி நாட்டு பிள்ளையார் கோயில் தெரு, வரதமுத்தையா தெரு, அம்மன் கோயில் தெரு பகுதிகளில் 8 பேர், முத்தியால்பேட்டை, பிராட்வே, காக்கா தோப்பு பகுதிகளில் 7 பேர் என 81 பேருக்கு நேற்று நோய் தொற்று ஏற்பட்டது. தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் 5 பேர், கொருக்குப்பேட்டை பாரதி நகரில் 7 பேர், புதுவண்ணாரப்பேட்டையில் 4 பேர், காசிமேடு பகுதியில் 5 பேர், வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் 6 பேர் என 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சிறப்பு விமானத்தில் வந்த 5 பேருக்கு தொற்று:
துபாயில் முறையான ஆவணம், பாஸ்போர்ட் இல்லாமல் தவித்த 100 இந்தியர்கள், தூதரக அதிகாரிகள் நடவடிக்கையால் மீட்கப்பட்டு, கடந்த 23ம் தேதி நள்ளிரவு சிறப்பு தனி விமானத்தில் சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் ஆவடி ஐஏஎப் ராணுவ தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக அவர்கள் விமான நிலையத்தில் இறங்கும்போது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் மருத்துவ பரிசோதனை முடிவு வந்தது. அதில், 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.