×

அடுக்குமாடி குடியிருப்பில் வயதான தம்பதி மர்மச்சாவு: சொத்துக்காக கொலையா? போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வயதான தம்பதி உடலை போலீசார் மீட்டனர். இவர்களுக்கு வாரிசு இல்லாததால் சொத்துகளை அபகரிக்க கொலை செய்யப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேடு கில்நகர் மத்திய சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஜீவன் (80). இவர், தனது மனைவி தீபா (70) என்பவருடன் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. ஜீவன், புரசைவாக்கத்தில் துணிகளுக்கு எம்ப்ராயிடிங் ெசய்யும் கடை நடத்தி வந்தார். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

வயதானவர்கள் என்பதால் குடியிருப்புவாசிகள் ஜீவன் மற்றும் அவரது மனைவி தீபாவையும் கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இருவரும் பரிசோதனைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக ஜீவன் மற்றும் அவரது மனைவி வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில், அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் நேற்று சூளைமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் வந்து பார்த்தபோது படுக்கை அறையில் ஜீவன் மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயதானவர்கள் என்பதால் இருவரின் சளி மாதிரியை பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உயிரிழந்த தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது என்பதால், தனிமையில் இருந்த அவர்களை யாரேனும் சொத்துக்காக கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : apartment ,Marmachau , Apartment, elderly couple, death, murder, police investigation
× RELATED திருநெல்வேலியில் சாலை விபத்தில்...