சென்னை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பார்கள். இதை போக்குவரத்து போலீசாரிடமும் செலுத்தலாம். அல்லது சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் செலுத்தலாம். மேலும், அபராதத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டது. ‘விர்சுவல் கோர்ட்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த திட்டம் சென்னையில் இன்று தொடங்கப்படுகிறது. இதை, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை தலைவராகவும், நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, எம்.சுந்தர், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சி.சரவணன் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட ‘ஐகோர்ட் கம்ப்யூட்டர் கமிட்டி’ உருவாக்கியுள்ளது. சென்னையில் ‘இ-சலான்’ முறையில் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்கின்றனர். இதன்படி, விதிமீறலில் ஈடுபட்டவரின் செல்போன் நம்பர், வாகன எண் உள்ளிட்ட விவரங்களை ‘விர்சுவல் கோர்ட்ஸ்’ இணையதளத்தில் பதிவிட்டு, அபராத தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். அபராதம் செலுத்த விரும்பாதவர்கள் வழக்கு தொடர முடியும்.