சென்னை: இலவச மின்சாரத்தை பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் 4 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்கள், நகரங்கள், பேரூர்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அஞ்சலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மின்சார அலுவலகங்கள் முன்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி இன்று அண்ணா சாலை மத்திய தபால் நிலையம் முன் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் முன்னிலையில் காலை 10.30 மணி அளவில் நடக்கிறது, தண்டையார்பேட்டை மகாராணி தியேட்டர் அருகில் வசந்தகுமார் எம்பி தலைமையில், வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் முன்னிலையிலும்,வடபழனி தபால் நிலையம் முன்பு, காங்கிரஸ் ஊடக துறை தலைவர் கோபண்ணா தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.வாசு முன்னிலையிலும், அண்ணா நகர் தபால் நிலையம் முன் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையிலும், முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர் வீரபாண்டியன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சமூக விலகலை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.