×

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏசி இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க முடியுமா?

சென்னை: ஏசி இல்லாமல் மெட்ரோ ரயில்களை இயக்குவது என்பது சவாலான விஷயம் என்று மெட்ரோ ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது அனைத்து பொது போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஜூன் 1ம் தேதி முதல் பொதுபோக்குவரத்து தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கோடைகாலத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ெமட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களும் நவீன கட்டமைப்புடன் ஏசி பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது.

தற்போது பல்வேறு தளர்வுகள் மூலம் சாலை போக்குவரத்து, உள்நாட்டு விமான சேவை மற்றும் ஏசி அல்லாத ரயில் பெட்டிகளை மத்திய அரசு இயக்கி வருகிறது.
ஆனால், மெட்ரோ ரயில் சேவைக்கு மட்டும் இதில் இடம் இல்லை. மெட்ரோ ரயில் சேவை என்பது முழுக்க முழுக்க ஏசி பயன்பாட்டை மையமாக வைத்து இயக்கப்படுவது. மெட்ரோ நிலையங்களுக்குள் செல்வது முதல் ரயில் பெட்டிகள் வரை அனைத்தும் ஏசியால் வடிவமைக்கப்பட்டது. ஏசி இல்லை என்றால் சுரங்கப்பாதை நிலையங்களிலும், ரயில் பெட்டிகளிலும் மூச்சு விடுவது என்பது மிகவும் சிரமமாகிவிடும்.  இதேபோல், குளிர்ந்த நிலையில் கொரோனா வேகமாக பரவும் என்பதால் தற்போது மெட்ரோ ரயில் சேவையை இயக்குவது சாத்தியமில்லை. குறிப்பாக, ஜூன் 10ம் தேதி வரையில் மெட்ரோ ரயில் சேவை என்பது இருக்காது.

எனினும், ரயில் நிலையங்களை போன்றே மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்பாடு உள்ளிட்டவைகள் கட்டாயம் கடைபிடிக்க பயணிகள் அறிவுறுத்தப்படுவார்கள். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு கூறினார்.



Tags : Metro Train Run Without AC , Corona, Metro Rail, Curfew
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...