சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து உதவி கமிஷனர் உட்பட 11 போலீசாருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர காவல் துறையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஊரங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் மற்றும் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
தொற்று பாதிக்கப்பட்ட உதவி கமிஷனர் உட்பட 11 போலீசாரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் அவர்களிடம் பணியாற்றிய காவலர்களையும் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். சென்னை மாநகர காவல் துறை நேற்று வரை மொத்தம் 262 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.