×

ஜெயங்கொண்டம் அருகே விபத்து கார் மோதி விவசாயி, 50 ஆடுகள் பலி: 2 பேர் படுகாயம்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே நேற்றுமுன்தினம் இரவு கார் மோதி விவசாயி, 50 ஆடுகள் பலியாயினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தேவமங்கலத்தை சேர்ந்தவர் காமராஜ் (50). விவசாயி. இவர் மற்றும் கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் உள்பட 6 பேருக்கு சொந்தமான 250க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன் ஓட்டிச்சென்று கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு காமராஜூம், சந்திரசேகரனும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு தேவமங்கலத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெண்ணங்குழி என்ற இடத்தில் சென்னை - கும்பகோணம் தேசிய சாலையில் வந்தபோது நாய் குரைத்ததால் ஆடுகள் பயந்து சாலையில் சிதறி ஓடின. அப்போது அந்த வழியே மின்னல் வேகத்தில் வந்த கார் ஆட்டு கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் படுகாயமடைந்த காமராஜ் அந்த இடத்திலேயே பலியானார். மேலும் 50 ஆடுகளும் பலியாயின. சந்திரசேகரன் மற்றும் காரில் வந்த சேகர் ஆகிய இருவரும் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காரும் சேதமடைந்தது. இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்து காரை ஓட்டி வந்த விழுப்புரம் ஆற்காடு மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம் மகன் ராஜா(25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident , Farmer, 50 goats killed, 2 injured, accident
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...