சென்னை: சென்னையில் சில தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சென்னையில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். தொழிற்பேட்டைகளை இயக்க சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. 25% தொழிலாளர்கள் மட்டும் கொண்டு தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும் எனவும், 55 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு வழிமுறைகள் அனைத்தும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.