திருமலை: தெலங்கானா, நாராயணகட் தொகுதியில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் பூபால். இவர் கடந்த மாதம் 7ம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கூடவும், நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளுக்கு பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தாராம். இதற்காக தனியார் நிகழ்ச்சி அரங்கை வாடகைக்கு எடுத்து 500க்கும் மேற்பட்டோர் புடைசூழ 60 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை வெட்டி அவர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் விதிமீறி நடந்துகொண்டனராம்.
இதுகுறித்து நாராயணகட் பகுதியை சேர்ந்த தனியார் தெலுங்கு டிவி நிருபர் பரமேஷ் என்பவர் வீடியோவுடன் செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அண்மையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ பூபால்ரெட்டி அந்த நிருபரை பழிவாங்க திட்டமிட்டாராம். இதையடுத்து நாராயணகட் பகுதியில் அந்த நிருபர் கட்டிவரும் வீட்டை இடிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எந்த முன்னறிவிப்பும் இன்றி புல்டோசர் மூலம் நகராட்சி நிர்வாகத்தினர், நிருபருக்கு சொந்தமான இடத்தில் அஸ்திவாரம் போட்டு பில்லர் அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் அவற்றை இடித்து தரைமட்டமாக்கினர்.