×

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள் மறியல்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பல்லாவரம், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மோலாக இவர்கள் வேலை இழந்து, வறுமையில் தவித்து வருகின்றனர். இவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், நடவடிக்கை இல்லாததால், கடந்த வாரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அதன்படி எந்த நடவடிக்கையும் இல்லை.  இதனால், ஆத்திரமடைந்த வடமாநில தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி எம்ஜிஆர் சிலை அருகே திரண்டு, திருநீர்மலை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி கோஷமிட்டனர்.

தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், ரயில் மூலம் அவர்களை சொந்த ஊர் அனுப்பும் வகையில்  அவர்களது பெயர், முகவரி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Northern Territory ,home , Northland workers, picket
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு