சென்னை: வணிக வரித்துறை இணை ஆணையர் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அலுவலகம் தொடர்ந்து செயல்படுவதால் ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். சென்னை யானைகவுனியில் வணிக வரித்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் 25 வணிக வரித்துறை வட்டங்கள் செயல்படுகின்றன. துணை வணிக வரி அலுவலர், கண்காணிப்பாளர் என 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் ஆ பிரிவு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும், மற்ற ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வந்தால் போதும் என்றும் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அனைத்து ஊழியர்களும் தினசரி பணிக்கு வர வேண்டும் என்று இணை ஆணையர் உத்தரவிட்டிருந்ததால், இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் தினமும் பணிக்கு வருகின்றனர். இந்த நிலையில் இணை ஆணயைரின் உதவியாளருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் இந்த அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை என்றும் சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பதற்றத்தில் உள்ளனர்.