ஹைதராபாத் : ஆந்திராவில் அரசு பேருந்தை கடத்தி சென்றவரை பல கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டம் தர்மவரத்தில் இந்த துணிகர செயல் அரங்கேறியுள்ளது. கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்த இளைஞன் முஜாமி கான் என்பவர் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பேருந்தை கடத்திச் சென்றார். இந்த தகவலை அறிந்த போலீசார் பேருந்தை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பேருந்தை கடத்திய பெங்களூர் விஜயபுராவை சேர்ந்த முஜாமி கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஊரடங்குக்கு முன்பு அனந்தப்புரத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், ஊரடங்கு காரணமாக ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்ததாகவும் குறிப்பிட்டார். அதனால் இன்று அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்ததாகவும் அதன் பின்னர் பனிமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுத்து அதில் பெங்களூரு செல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.