சென்னை: கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசின் தலைமை செயலாளரை நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். சென்னையில் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களில் சட–்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்திட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளையும் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபடுத்திட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அனைத்து பொருட்களையும் தன்னார்வலர்கள் மூலம் அளித்திட வேண்டும். ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள நுண் நிதி நிறுவனக் கடன்கள், வாகன கடன்கள், வீடு கட்ட வாங்கியுள்ள கடன்கள் போன்ற அனைத்து கடன் வசூலையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.