×

தப்லீக்-எ-ஜமாத் மத மாநாட்டில் வெளிநாட்டவர்கள் பங்கேற்கவில்லை என விசாரணையில் தகவல்: டெல்லி போலீசார் அதிர்ச்சி

டெல்லி: கொரோனா வைரஸ் கிருமி தொற்று பரவ காரணம் என புகாருக்குள்ளான தப்லீக்-எ-ஜமாத் மீதான வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை முன் ஆஜரான வெளிநாட்டவர்கள் தாம் மத மாநாட்டுக்கு வரவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். தப்லீக்-எ-ஜமாத் சார்பில் டெல்லி நிஜாமுத்தீனில் உள்ள அதன் தலைமையகமான மர்கஸில் மார்ச் 1 முதல் 23 ஆம் தேதி வரை மத மாநாடுகள் நடைபெற்றன. இதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 8000 பேர் அம்மாநாட்டில் பங்கேற்றனர். இதே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 1600 பேரில் பலருக்கும் இருந்த கொரோனா தொற்று இங்குள்ள இந்தியர்களுக்கும் பரவியது. இதை அறியாமல் மாநாடுகள் முடிந்து பின் பெரும் பகுதியினர் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இன்னும் பலர் டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள மசூதிகளில் மதப்பிரச்சாரம் செய்யவும் சென்றுள்ளனர். மற்றவர்கள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாட்டால் மர்கஸில் சிக்கிக்கொண்டார். மர்கஸில் இருந்த 2361 பேருக்கும் மார்ச் 27 தேதி முதல் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் டெல்லி போலீசார் 30 ம் தேதி மர்கஸுக்கு சீல் வைத்தனர். மர்கஸில் இருந்தபோது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இருக்கும் பல்வேறு மசூதிகளிலும் அரசு நடவடிக்கைக்கு பயந்து சில வெளிநாட்டவர் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களில் பலருக்கும் இருந்த கொரோனா தொற்று நாடு முழுவதிலும் சுமார் 30 சதவிகிதம் அதிகரிக்க காரணமானது.

இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் தனது செய்தியாளர் கூட்டத்தில் பதிவு செய்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு காரணமான வெளிநாட்டவர்கள் மீது டெல்லி போலீசார் தொற்று பரவல் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து விசாரணையை நடத்தினர். தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் இதே நிலை ஏற்பட்டது. பெரும்பாலானவர்கள் சுற்றுலா மற்றும் மருத்துவ விசா அனுமதியுடன் இந்தியா வந்து மதமாநாட்டில் கலந்து கொண்டதும் தெரிய வந்தது. இதனால் விசா விதிமுறை மீறல் வழக்குகளும் வெளிநாட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டன. பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கும் நிலையும் ஏற்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இருப்பினும் வழக்குகள் காரணமாக அனைவரும் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி காவல்துறை குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். டெல்லி காவல்நிலையத்தின் தலைமை அலுவலகத்தில் வெளிநாட்டவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களில் பலரும் தாம் மத மாநாட்டிற்கு வரவில்லை எனவும் முஸ்லிம் புனிதத்தலம் என்பதால் சுற்றுலா பயணியாகவே மர்கஸிற்கு சென்றதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து டெல்லி காவல்துறை தலைமையக வட்டாரங்கள் கூறுகையில், வெளிநாட்டவர் கூறியுள்ள பதில் அதிகாரிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் பலர் வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர். ஆங்கிலம், உருது மொழி தெரியாதவர்களிடம் விசாரணை நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது.

இந்த நாட்டினருக்கான மொழிபெயர்ப்பாளர்களும் சரியாகக் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே இந்த வழக்கை எப்படி கையாள்வது என மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்காக டெல்லி காவல்துறை காத்திருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய அளவில் முடிவு எடுத்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்திலும் வெளிநாட்டவர் சுமார் 400 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர்களது பாஸ்போர்ட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இதற்கென புதிதாக உருவாக்கப்பட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : foreigners ,Investigators ,Tabliq ,convention ,Delhi ,conference ,Delhi Police , Tabliq-e-Jamaat Religious Conference, Foreigners, Not Attending, Investigations, Information, Delhi Police Shock
× RELATED ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 வெளிநாட்டினர் கைது