×

பல ஆயிரம் ஓட்டல்கள் மூடல்: வியாபாரிகள் தவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. கொரோனா தடுப்பு ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன.‌ ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சிறிய அளவிலான ஓட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும், கடையில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி, சிறு சிறு ஓட்டல்கள் மட்டும் ஓரளவு இயங்குகின்றன. ஆனால், பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. இதனால், வியாபாரிகள், ஓட்டல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், “வெளியூரை சேர்ந்த அதிகமான நபர்கள் ஓட்டலில் சாப்பிட்டு வந்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்கூட கடைக்கு வருவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அளவிற்கு கூட இல்லை. பெரிய ஓட்டல்களில், அதிக ஊழியர்களை வேலைக்கு வைத்து உணவு தயாரித்து விற்பனை செய்தால் நஷ்டம்தான் ஏற்படும். அதனால், பெரிய ஓட்டல்களை திறக்க முடியாத நிலை உள்ளது. பஸ்கள் இயங்கி சகஜ நிலை ஏற்பட்டால் மட்டுமே ஓட்டல்களை முழுமையாக திறக்க முடியும். சில இடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. இதனால் பார்சல் கேட்டு வருவோர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது” என்றனர்.

Tags : closure ,hotels ,merchants , closure, several thousand hotels, merchants ,suffer
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...