×

கொரோனா குறித்து உத்தவ் தாக்கரே முடிவு எடுக்க பயப்படுகிறார்: தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு

மும்பை: நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்தநிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று காணொலி காட்சி மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், மும்பையில் அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளிடம் படுக்கைக்கு ஒரு நாளுக்கு ரூ.30 ஆயிரம் வசூலிக்கின்றன. தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் 80 சதவீதம் அரசுக்கு சொந்தமானது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் இது நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது மராட்டிய அரசின் மிகப்பெரிய பிரச்சினை ஆகும். முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே புதியவர் முடிவுகளை எடுக்க பயப்படுகிறார். எனவே அதிகாரிகளை தான் அதிகம் சார்ந்து உள்ளார். ஆனால் கொரோனா பிரச்சினையில் அரசு அதிகாரிகள் படம் காண்பித்து கொண்டு உள்ளனர். அரசு அதிகாரிகள் இடையே மோதல்கள் உள்ளன. அதிகாரிகளை ஒருங்கிணைக்க உறுதியான அரசியல் தலைமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்வதை தடுக்க அரசு பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதையே அரசு விரும்பியது போல காட்டுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு அதிகம் பங்களிப்பு தந்துள்ளனர். தற்போது அவர்கள் திரும்ப வருவார்களா? என்ற பயம் நம்மிடையே எழுந்து உள்ளது. தற்போது உள்ள சூழலில் அவர்கள் திரும்பி வரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சீனாவில் இருந்து வெளியேறும் தொழிற்சாலைகளை மராட்டியத்துக்கு இழுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆனால் அதற்குரிய ஆக்கப்பூர்வ செயலில் மாநில அரசு ஈடுபடவேண்டும். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் ஏற்கனவே விரிசல்கள் விழுந்துவிட்டன என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Tags : Uddhav Thackeray ,Devendra Patnais , Corona, Uddhav Thackeray, Decision, Fear, Devendra Patnavis, Indictment
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!