சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே.பழனிசாமி 17.8.2017 தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா (மறைந்தவர்) இல்லத்தை நினைவு சின்னமாக மாற்றப்படும் என தெரிவித்து இருந்தார். அவரது சாதனைகளை நினைவுகூறும் வகையில் அவரது இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவித்து இருந்தார். முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு தமிழ் வளர்ச்சியால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள .“வேத நிலையத்தை ” கையகப்படுத்துவதற்காக நடவடிக்கை 05.10.2017 அன்று தொடங்கப்பட்டது.
மேலும் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உபயோகப்படுத்தாமல் இருப்பதன் காரணமாக அரசு கையகப்படுத்தி பராமரித்து வருகிறது. இதனை தொடர்ந்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க ஆளுநர் பின்வரிலால் புரோகித் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார். இந்த வேதா இல்ல அறக்கட்டளைக்கு முதல்வர் தலைவராக இருப்பார் என்றும் , துணை முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் மக்கள் தொடர்பு தகவல் இயக்குநர் செயலாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை வேதா இல்லத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அங்குள்ள பொருட்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.