சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய மாணவர்கள் சங்கமும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், ‘மத்திய அரசு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஜூலை மாதம் தான் நடத்த உள்ளது. ஆனால் தமிழக அரசு மட்டும் அவசர கதியில் 10ம் வகுப்பு தேர்வை ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் சி.முனுசாமி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ‘கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில் பொதுத்தேர்வை எப்படி நடத்துவீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து பதில் தருமாறு உத்தரவிட்டனர்.