புதுச்சேரி: உலகையே புரட்டி போட்டுள்ளது கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொரோனா என்ற பெயர் தாங்கிய 4 புதிய வால்வோ பேருந்துகள் பதிவு செய்வதற்காக புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. அதுசமயம் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் அப்பேருந்துகள் அனைத்தும் சீகல்ஸ் ஓட்டலை ஒட்டியுள்ள பழைய துறைமுக பகுதியில் காலியிடத்தில் நிறுத்தப்பட்டன. பஸ்சில் கொரோனா என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. 56 நாளாக ஊரடங்கு தொடரும் நிலையில் அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவில் 2019ல் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்நோயின் பெயர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இதனால் கொரோனா என்ற பெயரை தாங்கி ஒரு நிறுவனம் சொகுசு (வால்வோ) பஸ்சை இயக்க முடிவெடுத்து அதை பதிவுக்காக புதுச்சேரிக்கு அனுப்பியிருந்தது. இந்த பஸ்சை எடுத்துவந்த கர்நாடக பணியாளர்கள் ஊரடங்கின்போது தங்களது சொந்த மாநிலத்துக்கு சென்றுவிட்ட நிலையில் மீண்டும் அவர்கள் புதுச்சேரிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வரையிலும் புதுச்சேரி போக்குவரத்து துறையில் இதற்கான பதிவு முடிக்கப்படாமல் கொரோனா பெயரை தாங்கிய இந்த 4 பஸ்களும் 2 மாதங்களை கடந்தும் அங்கேயே காத்துக் கிடக்கின்றன.