வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்தல் 12க்கும் மேற்பட்ட அரசு கண்மாய்கள் உள்ளது. மயிலாடும்பாறை யூனியன் கட்டுப்பாட்டிலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் உள்ள இந்த கண்மாய்களை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே கண்மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் வருசநாடு கண்ணன் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் கோடை காலங்களில் ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் பஞ்சம் வருகிறது. விவசாயிகளுக்கு நீர் பாய்ச்சுவதும் சிக்கல் நிலவி வருகிறது. இந்த சூழலில் கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவது வேதனையாக உள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் வாயிலாகவும் நோட்டீஸ் அனுப்பியும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதன் மர்மம் என்ன? எனவே காலம் தாழ்த்தாமல் விரைந்து அனைத்து கண்மாய்களின் ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.