×

நடிகர், நடிகை ,தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 பேருக்கு மட்டுமே அனுமதி : நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு பச்சைக் கொடி

சென்னை : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 19ந் தேதி முதலே சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜை சந்தித்து, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் நிபந்தனையுடன் அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் 5 ஆயிரம் பேர் உடனடி வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பதையும் அமைச்சர் கடம்பூர் ராஜிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனையுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களிடம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI ) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்
(STEPS) சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள், சின்னத்திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள்:-

*சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் (indoor shooting only) படப்பிடிப்பு நடத்த வேண்டும்.தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு (Containment zone) இது பொருந்தாது.

*பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர–(except Containment zone) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடைஏதும் இல்லை.

*பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

*படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
·
*படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர்,
நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும்.

*படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

*படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

*அதேபோன்று, படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினிகொண்டு அவ்வவ்போது சுத்தம் செய்ய வேண்டும்.
·
*சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு  அனுப்ப வேண்டும்.

*அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

*சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற
வேண்டும்.

*மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

*படபிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதை, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்து கொண்டு, படப்பிடிப்பு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : persons ,actress ,actor , Actor, Actress, Technical Staff, License, Conditions, Symbol, Shooting, Tamil Nadu
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...