கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார் மாதர்பாக்கம், நேமலூர், கண்ணம்பாக்கம், பெரியபுலியூர், தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர், அப்போது தேர்வாய் கண்டிகை ஏரியில் ஒருவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதிரவன் (30) என்பது தெரியவந்தது. மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர். அவரிடம் இருந்து 50 லிட்டர் ஊறல் பறிமுதல் செய்துஅழிக்கப்பட்டது.