×

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தால் அமெரிக்க அரசியலில் குடுமிபிடி சண்டை : டிரம்ப் புகழ்ச்சி; எதிர்க்கட்சிகள் இகழ்ச்சி

வாஷிங்டன்: நம்மூரில் பிடிக்காத அரசியல் தலைவர் நல்லது, கெட்டது எது செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீம்ஸ் போட்டு சமூக வலைதளத்தில் கிண்டலடிப்பது சமீபத்திய வழக்கமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இருக்கிறார். இவர் கொரோனாவிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாக வெளிப்படையாக கூற, அதுவே அரசியல் சண்டையாகி விட்டது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இம்மருந்தை பரிந்துரைக்கின்றன.

ஆரம்பத்தில் இந்த மாத்திரையை ஆஹா, ஓஹோவென புகழ்ந்து பேசியது அமெரிக்க அதிபர் டிரம்ப் தான். அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் கூட ‘இன்னும் ஆய்வுகள் நடத்த வேண்டும்’ என கூறிய போது கூட, டிரம்ப் ‘நல்ல பலனளிக்கிறது’ என சுய சான்றிதழ் அளித்தார்.அதோடு, இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியாவை மிரட்டி, லட்சக்கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா வாங்கியதால், ஹைட்ராக்சி குளோரோகுயின் பிரபலமானது. அதோடு விட்டாரா டிரம்ப், ‘கொரோனாவிடம் இருந்து என்னை தற்காத்து கொள்ள தினமும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருகிறேன்’ என பகிரங்கமாக பேட்டி அளித்தார். இது அமெரிக்க அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப்பின் எதிரியான அந்நாட்டின் சபாநாயகர் நான்சி பெலோசி ஒரு நேர்காணலில், ‘‘டாக்டர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். அமெரிக்கர்களும் அதைத்தான் செய்வார்கள். ஹைட்ராக்சி குளோரோகுயினை எடுத்துக் கொள்ள மாட்டேன். நிரூபிக்கப்படாத அந்த மாத்திரை சாப்பிடுவதால் டிரம்ப் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்,’’ என்றார். துணை அதிபர் மைக் பென்சும் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதில்லை என கூறியிருக்கிறார். பல எதிர்க்கட்சி தலைவர்களும் டிரம்ப்பை விளாசுகின்றனர்.

மறுபுறம் மருந்து பற்றிய எதிர்மறை தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த மருந்தை சாப்பிடும் முதியவர்கள் இறக்கிறார்கள் என்றும், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தால் தான் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் தகவல்கள் பரபரப்படுகின்றன.  இந்நிலையில், நேற்று அதிபர் டிரம்ப், ‘‘கொரோனா வைரசை எதிர்த்து போராடும் தரமான மருந்து இது’’ என்றார். கொரோனா ரணகளத்திலும் இப்படியொரு அக்கப்போர் அமெரிக்காவில் நடக்கிறது.

‘அதிகம் பேர் பாதித்ததை  கவுரவமாக கருதுகிறேன்’
உலகளவில் கொரோனாவுக்கு மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 335 பேர் இறந்துள்ளனர். இதில், அமெரிக்காவில் மட்டுமே 91 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மேலும், 15 லட்சம் பேர் பாதித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா தொற்று அதிகமுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறதே என கேள்வி கேட்கிறீர்கள். மற்ற நாடுகளை விட நாம் அதிகம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தியுள்ளோம். அதிக தொற்று இருப்பது மோசமானதல்ல. இது நல்ல விஷயமே. இதை கவுரவத்தின் அடையாளமாக கருதுகிறேன்,’’ என்றார்.

மருந்து கம்பெனியில் பங்கு இருக்குமோ?
அமெரிக்காவின் செனட் மைனாரிட்டி தலைவர் சக் ஸ்கியூமர் கூறுகையில், ‘‘ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொள்வதாக டிரம்ப், நாட்டு மக்களிடம் கூறுவது பொறுப்பற்ற செயல். வல்லுநர்கள் இது உதவாது என்கிறார்கள். ஆனால் டிரம்ப் புகழ்கிறார். ஒருவேளை அவரது குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ அந்த மருந்து நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்கலாம். இது அதிபருக்கு அழகல்ல. கொரோனாவை எதிர்க்க அரசியல் கையாளாகாத தனத்தை மறைக்கக் கூட டிரம்ப் இவ்வாறு செய்யலாம்,’’ என விமர்சித்துள்ளார்.

Tags : Trump Trump ,Opposition ,American Politics Fighting Trump , Hydroxy Chloroquine, USA, Trump, Opposition
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...